காதலுக்கு
பிரபஞ்சம் ஒரு கைப்பிடி
–
நௌஷாத் கான் .லி,
அபுதாபி
காதலுக்கு பிரபஞ்சம் ஒரு கைப்பிடி
– இது ஒரு கவிதை நூல் .
கவிஞர் மெஹராஜ் அவர்களின் கவிதை பார்ப்பதற்கும் ,படிப்பதற்கும்
எளிமையாக இருந்தாலும் அந்த கவிதைகளில் எல்லாம் ஒருவித ஈர்ப்பும், யதார்த்தமும் நிறைந்து
இருக்கும்.
இந்த புத்தகம் முழுவதும் நிறைய கவிதைகள் மனதுக்கு பிடித்து
இருந்த போதும் அவற்றையெல்லாம் ஒட்டு மொத்தமாக விமர்சனங்களில் சொல்லி விட்டால் புத்தகம்
படிக்க விரும்பும் அன்பர்களுக்கு அவை இடையூறாக கூட இருக்கக்கூடும் எனவே என் மனம் கவர்ந்த
ஒரு சில கவிதைகளை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு
கட்டப்பை போல
எல்லா
துயரங்களையும்
தனக்குள்
நிரப்பி கொள்கிறது
தூக்கம்
துயரங்களுக்கு ஒரு தற்காலிகமான தீர்வு தூக்கத்தை விட என்ன
இருந்து விட போகிறது.
கர்வம்
எல்லாம்
ஒன்றும்
இல்லை உன்னோடு
பேசாமல்
இருப்பதற்கு
நீயாக
வந்து பேசினால்
காலர்
தூக்கி விட்டுக்கொள்ளும்
என்
காதல் அவ்வளவு தான்
இன்றைய காதலின் யதார்த்தத்தை இதை விட வேறு எப்படி தான் சொல்ல
முடியும் !
கைகளை
அசைத்தபடி
நீண்ட
நேரம் கால் கடுக்க
நின்று
கொண்டே
சாப்பிட
அழைக்கும்
அந்த
நெடுஞ்சாலை
உணவகத்து
ஊழியரை
நான்
என் கவிதையில்
இடம்
கொடுத்து
அமரவைத்து
அழகு
பார்த்தேன்.
மனிதம் நிறைந்த ,அன்பு நிறைந்த இது போன்ற கவிதைகளை இவரது
படைப்புகளில் ஆங்காங்கே காணலாம்.
என்னைப்போலவே
நீயும்
என் மீது
அன்பு
செய்திருந்தால்
அன்பின்
யாசகியாக
இல்லாமல்
நான்
எப்பொழுதோ
தேவதையாகி
இருப்பேன்
அன்பு மட்டுமே எல்லாவற்றையும் அழகாய் மாற்றும் என்பதை இதை
விட எப்படி அழகாய் சொல்லி விட முடியும்
வந்தமரும்
தருணம் எல்லாம்
பறத்தலின்
இன்பத்தை
பறவையிடம்
கேட்டறிந்து
உதிரும்
இலைகளிடம்
வா
பயணிக்கலாம் …
என்பதை
தவிர்த்து
வேறு
என்ன கேட்கும் காற்று
இயற்கையில் நிகழும்
சில சம்பவங்களை இப்படியும் கற்பனை செய்து அழகாய் சொல்லி விட முடியுமா என வியக்க வைக்கிறார்
கவிஞர் மெஹராஜ்.
ஒரு அழகான மாலை வேளை, கொஞ்சம் மழையின் தூறல் ,கையில் ஒரு
கோப்பை தேநீர் ,இளையராஜா இசை அதோடு கவிஞர்
மெஹராஜ் அவர்களின் கவிதை புத்தகத்தோடு ஒரு வாசிப்பு அமைந்தால் பெரும் சுகம்
தான்.
நிச்சயம் இளைஞர்களுக்கு பிடித்தமான நூலாக இந்நூல் விளங்கும்!
————————————————-
காதலுக்கு பிரபஞ்சம் ஒரு கைப்பிடி
கவிஞர் மெஹராஜ்
இஸ்மாயில்
ஆதிரா பதிப்பகம்
விலை ரூ. 180/-
————————————————-


