போதை
போதை என்பது காலங்காலமாக இருந்து கொண்டுதான் இருக்கிறது, என்னவோ இப்போதுதான் அது கொண்டு வரப்பட்டது போல் பேசாதீர்கள் என்று ஒருமுறை நண்பர் ஒருவர் சொன்னார். அவர் சொன்னது உண்மைதான் என்றாலும் சமீபத்திய வருடங்களில் போதை எந்தளவுக்கு இளைஞர்களை, குறிப்பாக பள்ளிக்கூட மாணாக்கர்களைத் தன் கோரக்கரங்களில் பிடித்து வைத்துள்ளது என்பதை நம் கண்முன்னே நடக்கும் நிகழ்வுகளை வைத்துப் புரிந்து கொள்ளலாம்.
இன்றைய நிலையில் சரக்கு அடிப்பது என்பதை என்னவோ பெரிய அந்தஸ்து என்பது போல் நினைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் குடிப்பவர்களை ஊரே வெறுக்கும், ஆனால் இப்போதெல்லாம் குடிகாரர்களை ஊரே கொண்டாடுகிறது. காரணம் அப்போது ஊரில் ஏதோ சிலர் குடித்தார்கள், இன்றோ ஊரே குடிக்கிறது. இப்போதெல்லாம் வீட்டில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் முக்கியமான பங்கு வகிப்பது மதுவாகத்தான் இருக்கிறது.
குறிப்பாக, பள்ளிக் கல்லூரி மாணவர்கள் போதையின் பின்னே போனது சமீபத்திய வருடங்களில்தான். பள்ளிகளை ஒட்டியிருக்கும் கடைகளில் இவற்றை மறைத்து வைத்து விற்கிறார்கள் என அவர்களைக் கைது பண்ணி, கடைகளை மூடி என்னென்னவோ செய்தார்கள் என்றாலும் போதைப் பொருட்கள் பள்ளிகளுக்குள் எந்தக் குறையும் இல்லாமல் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. பள்ளிகளின் சுவரில் மட்டும் நூறு மீட்டர் சுற்றளவில் போதைப் பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது என்று போட்டிருப்பதைப் பார்க்கும் போது வேதனையான சிரிப்புத்தான் மிஞ்சியது.
ஊர் திருவிழாவிற்காக ஒரு வாரம் விடுமுறையில் போனபோது போதையின் பிடியில் சிக்கி ரோட்டில் அடித்துக் கொண்டு உருண்ட மாணவர்களையும், வேலைக்குப்போக வேண்டிய நேரத்தில் நகரத்தில் இருந்து கிளைச்சாலைகளாகப் பிரிந்து கிராமங்களுக்குப் போகும் பாதைகளில் அமர்ந்து குடித்துக் கொண்டிருப்பவர்களையும், எதாவது ஒரு வேலையாகக் கூப்பிட்டால் எனக்குச் சரக்கு வாங்கித் தர்றியா என்ற கேள்வியை முன் வைக்கும் மனிதர்களையும், கட்டிட வேலைகளில் போது கொத்தனார்களுடன் சேர்ந்து சரக்கடிக்கும் சித்தாள்களையும், விருந்துக்கு வந்தவர்களுக்கு சரக்கு ஊற்றிக் கொடுக்க ஆட்களை நியமித்து வைத்திருக்கும் ஊர் பிரபலங்களையும், ஊருக்கு வந்திருக்கீங்க பாட்டில் கீட்டில் எதுவும் கொண்டு வரலையா எனக் கேட்கும் உறவுகளையுமே அதிகம் பார்க்க முடிந்தது.
‘இப்பல்லாம் சரக்கடிக்கிறதை விட்டுட்டேன் மச்சான். எம்புட்டு நாளைக்குத்தான் அப்புடியே திரியிறது, நமக்கும் குடும்பம் இருக்குல்ல‘ என்று போனமுறை சொன்ன உறவுக்கார மச்சான் ஒருவர் இந்தமுறை பார்க்கும் போது முகமெல்லாம் ஒடுங்கிப் போய், சம்பந்தமில்லாமல் சத்தம் போட்டுக் கொண்டு திரிந்தார். சரக்கடிக்கிறதை விட்டுட்டேன்னு சொன்னாரு… அப்பறம் ஏன் இப்படிச் சண்டை போடுறாரு எனத் தம்பி ஒருவரிடம் கேட்டபோது ‘அண்ணே சரக்கத்தான் விட்டிருக்கார். இப்பல்லாம் கஞ்சா மட்டுந்தான். இதுக்கு இது சரக்கே அடிச்சிருக்கலாம்‘ என்றார். கஞ்சா என்பது மிக அரிதாகத்தான் கிடைக்கும் என்பது போய் இப்பல்லாம் கஞ்சா சுலபமா, அதுவும் கிராமங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும் என்ற நிலைக்கு ஊர் வந்து சிலகாலம் ஆகிவிட்டது என்பதுதான் கொடுமை.
ஊர்ல கூத்து வைத்திருந்தோம், அதைப் பார்ப்பதற்கு நிறையக் கூட்டம் வந்திருந்தது. அதில் 90% ஆட்கள் போதையில்தான் இருந்தார்கள். கத்தலும் பேச்சுமாய் இருந்தார்கள். ஒரு பதினேழு, பதினெட்டு வயது மதிக்கத்தக்க பையன் ஒருவன் நிறை போதையில் வந்து அரங்கிற்கு முன்னே வந்து அமர்ந்து, உட்காந்திருக்கும் போதே ஆட்ட நிலையில் இருந்து கொண்டு கத்திக் கொண்டே இருந்தான். பேச்சோடு பேச்சாக நாடக நடிகர் இராதாகிருஷ்ணன் அவனைத் திட்டினாலும் அவன் அப்படியே தொடர்ந்து பண்ணிக் கொண்டிருக்க, காவல்துறையிடம் இவனை அங்கிட்டு தூக்கிட்டுப் போங்க சார் என்று சொன்னார். இவர்களை எல்லாம் குடும்பத்தில் உள்ளவர்கள் கண்டிப்பார்களா இல்லையா என்ற கேள்வி எனக்குள் எழுந்த அதே நேரத்தில் இன்றைய உலகில் நம் பிள்ளைகளை இந்தப் போதை மேகங்களுக்கு இடையே எப்படிச் சரியான பாதையில் பயணிக்க வைக்கப் போகிறோம் என்ற பயம் உண்டானது.
நம்ம ஊர்ல மட்டுமா..? உலகத்துலயே இப்படித்தான் இருக்கு தெரியுமா..? எனப் புள்ளி விபரக் கணக்குப் பேசிக் கொண்டு, பிரபலங்கள் மேடையில் நாங்க அப்ப தண்ணி அடிச்சிட்டு பொண்ணுகளைப் பற்றிப் பேசுவோம் எனச் சொல்லும் போது சிரித்துக் கொண்டு, போதை என்பது தேவை என்பதாய் மௌனம் காக்கும் மனிதர்களை என்ன சொல்வது..? அடுத்த வீட்டுல என்னமோ நடக்கட்டும் நம்ம வீட்டை நாம் பாதுகாப்பாய் வைத்திருப்போம், சாதிக்க வேண்டிய இளைஞர்களை நல்ல வழியில் கொண்டு செல்ல, போதையை ஒழிப்போம் என்ற எண்ணம் நமக்கு, குறிப்பாக நம் அரசியல்வாதிகளுக்கு வராத வரை போதை மெல்லமெல்ல இல்லையில்லை… வேகமாக இளைஞர்களை தனது பலி பீடத்தில் ஏற்றி மகிழத்தான் செய்யும்.


