சிறிது நாட்களாக உம்மாவின் நடவடிக்கையில் நிரம்ப மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எப்போதும் பேசிக்கொண்டே இருப்பவள் இப்போது முற்றிலும் அமைதியாகி விட்டாள். கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்கிறாள். மற்ற நேரங்களில் அமைதியோ அமைதி !!
அத்தனை எளிதில் கோபப்படாத உம்மா , இப்போதெல்லாம் சட்டென்று கோவப்பட்டு திட்டி விடுகிறாள். பிள்ளைகளின் விளையாட்டையும் சேட்டைகளையும் ரசித்தவள், இன்று பிள்ளைகள் மீதும் சிடுசிடுவென எரிந்து விழுகிறாள். மணிக்கணக்கில் பிள்ளைகளை மடியில் வைத்து கொஞ்சவாள். ஆனால் இப்போதெல்லாம் பிள்ளைகளை தூக்குவதேயில்லை.
மூன்று வேளையும் தன் விருப்பம் போல சமைக்கச் சொல்லி நன்றாக சாப்பிடுபவள் , இப்பொதெல்லாம் வைப்பதை சாப்பிட்டு விடுகிறாள். அதுவும் இரண்டு சப்பாத்தியிலிருந்து ஒரு சப்பாத்தியாக குறைந்து விட்டது. என்னான்னு கேட்டால், சுகர் மாத்திரை போட வேண்டுமென்ற காரணத்திற்காக மட்டுமே சாப்பிடுவதாக சொல்கிறாள்.
வெளிநாட்டில் இருக்கும் தன் மகன் பைசலோடு தினமும் மணிக்கணக்கில் பேசுவாள். அன்றைய நாளில் நடந்த நிகழ்வுகள் முதல் அவனை விசாரித்தவர்களின் விபரம் வரை எல்லாவற்றையும் பேசிக்கொண்டே இருப்பாள். ஆனால் இன்றோ நலம் மட்டும் விசாரித்து விட்டு அக்காவிடம் பேசுன்னு தொலைப்பேசியை கொடுத்து விடுகிறாள்.
உம்மாவின் தலைமுடி களைந்து ஒருநாளும் பார்த்ததில்லை. ஆனால் இப்போது அவளின் கூந்தல் சீப்பைக் கண்டு சில நாட்கள் ஆகிவிட்டது.
அக்கா !! உம்மா ஏன் இப்படி இருக்காங்க? என்ன தான் ஆச்சு ? இப்படியெல்லாம் இருக்க மாட்டங்களே !! வாப்பா இறந்ததிலிருந்து உம்மா இப்படி மாறிட்டாங்களோ ??
அடுத்தடுத்து கேள்விகள் கேட்ட பைசலிடம் எனக்கும் தெரியல? அதிலேயும் இந்த ஒரு வாரமா ரொம்ப கோபப்படுறாங்க. நான் பேசி பார்க்கிறேன்னு பதில் சொன்னாள் ஆமீனா.
இரண்டாவது கல்யாணம் செய்த கணவனை உதறி தள்ளிவிட்டு தம்பியின் ஆதரவில் இருக்கும் ஆமீனா பைசலின் ஒரே அக்கா. உம்மாவிற்கு பிறகு எல்லாமே அக்கா தான்…
ஒருநாள் வீட்டில் யாருமேயில்லாத சமயம் , உம்மாவின் பக்கத்தில் அமர்ந்து அவளின் கைகளை தந்து உள்ளங்கைக்குள் வைத்துக்கொண்டு ஆமீனா கேட்டாள்,
ஏன்மா இப்படி மாறிட்டே ? என்ன ஆச்சு ? உன்னைய இப்படி நாங்கள் பார்த்ததேயில்லையே என நீர் தழும்பி நிற்கும் கண்களோடு கேட்ட ஆமீனாவை பார்த்துக்கொண்டே இருந்த உம்மா, சட்ரென்று உடைந்து அழுது விட்டாள்.. இல்லை இல்லை வெடித்து விட்டாள் !!
ஏம்மா அழுவுற ? நான் ஏதும் தப்பா கேட்டுட்டேனா ? சில நிமிடங்களுக்கு பிறகு, அழுகை விசும்பலாக குறைந்ததும், உம்மா தொடர்கிறாள் !!
அது என்னவோ தெரியல ! உங்க வாப்பா இருந்தப்போ நாங்க அதிகம் பேசிக்கிட்டதில்ல. ஆனால் தினமும் காலையில் சாயா குடிச்சியா? சாப்ட்டியான்னு கேட்க நானும் மறக்க மாட்டேன், அவரும் மறக்க மாட்டார்.
எழுந்திருக்க கொஞ்சம் தாமதமானாலும், என்னாச்சுமா உடம்பு எதுவும் சரியில்லையான்னு யாருமில்லாத நேரத்தில் எனக்கு மட்டும் கேட்கிற மாதிரி நலம் விசாரிப்பார் !! சுபுஹ் தொழுதுட்டு அவர் வாங்கிட்டு வரும் சாயாவை கிளாசில் ஊத்தி தந்துட்டு கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருப்பார். அந்த இருட்டிலும் நாங்கள் பேசாமல் பேசிக்கொண்டு இருப்போம்.
எத்தனை பேர் இருந்தாலும் , என்கிட்ட தான் சமையல் முடிஞ்சிட்டாமான்னு கேட்பார். சில நேரத்துல அவர் சாப்பிட்ட தட்டுல, அவர் மிச்சம் வச்சதை கூட நான் சாப்பிட்டு இருக்கேன். அப்போலாம் அவர் கூடவே சாப்பிட்டது போலிருக்கும். வெளியே கிளம்புவதை பார்த்தால் , பத்திரமா போய்ட்டுவான்னு சொல்வார் !!
அடிக்கடி சண்டை போடுவோம் , திட்டிக் கொள்வோம் தான். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் எதுவுமே நடக்காதது போல என்னிடம் வந்து பீடி கேட்பார். பீடித்தட்டுல இருக்கு, எடுத்துக்கோங்னு சொன்னாலும் , நல்ல பீடியா எடுத்து கொடுன்னுச் சொல்லி , அதை வாங்கையில் கையை அன்பாக தடவிட்டு, சிரிச்சிட்டு போவார். சண்டை அங்கே தவிடு பொடியாகி விடும் !!
இப்போ சண்டை போடவும் சமாதானம் செய்யவும் அவர் இல்ல !! என்னிடம் இதெல்லாம் கேட்கவும் யாருமில்லை.
அவரின் காலடியில் நான் படுப்பேன் !! எந்தன் தலமாட்டில் அவர் படுத்திருப்பார். எழுந்ததும் கண் விழிப்பது அவர் முகத்தில் தான். ஆனால் இன்று அந்தயிடம் வெறுமையாக இருக்கிறது. ஒருவேளை இதெல்லாம் தான் காரணமாக இருக்கலாம்னு சொல்லிட்டு, சில வினாடிகள் நிறுத்தி பெருமூச்சு விட்டாள்…
தன் மேல் பொழிந்த காதல் மழை முற்றிலும் நின்ற சமயத்தில் எழும் வெறுமையை எவ்வாறு கையாள முடியும் !! அதன் வெளிப்பாடு மவுனமும் கோபமும் மட்டும் தானே !! இதற்கு உம்மா மட்டும் விதிவிலக்கா என்ன ?
உம்மா தொடர்ந்து பேசினாள்.
உங்க வாப்பா இருக்கும் வரை, சொந்தங்களில், வட்டாரத்தில் நடக்கும் பெரும்பாலான திருமணங்களில் நான் தானே தாலி எடுத்துக் குடுப்பேன். நிச்சயதார்த்த வீடு, சடங்கு வீடுகளுக்கு நிறைகுடம் அல்லது பால் செம்பு என்னை தானே கொண்டு போகச் சொல்வார்கள்.
கல்யாணத்துக்கு கூப்பிட வருபவர்கள், நீங்க தான் தாலியை எடுத்துக் கொடுக்கணும்னு குறிப்பிட்டு சொல்லிட்டு போவாங்க. ஆனா, இந்த பரக்கத், அவ வீட்டு கல்யாணத்துல என்னை பின்னாடி போயி உட்கார சொல்லிட்டா. அவ யாரு? என்னோட கூட பிறந்தவ தானே…
பொண்ணு வீட்டுக்கு போயிட்டு வான்னு ஒரு வார்த்தை கூட சொல்லல. அப்போ புருசன் இல்லாத பொம்பளைக்கு இங்க ஒரு மதிப்பும் இல்ல.. அப்படித்தானே !!!
மனதில் கிடந்த அனைத்தையும் மடை திறந்த வெள்ளம் போல கொட்டித் தீர்த்த உம்மா, எழுந்திருத்து திண்ணையில் போய் அமர்ந்து விட்டாள். புயலுக்கு பிந்திய அமைதி போல ஒரு நிசப்தம்!!
அப்போது தான் ஆமீனா யோசனை செய்து பார்க்கிறாள்.
=============================
கல்யாணம், சடங்கு போன்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்கு கணவரோடு இருக்கும் வயதில் மூத்த பெண்களை தாலி கட்டவும், நிறைகுடம் கொண்டு போகவும் சொல்வது தான் ஊர் வழக்கம். அந்தவகையில் தெரிந்த வகையில் ஏதாவது கல்யாணம் என்றால் உம்மா தான் தாலி கட்டவும், நிறைக்குடம் தூக்கிட்டு போகவும் செய்வாள். அதனை ஒரு மரியாதையாகவும் கவுரமாகவும் கருதியதால் அந்நேரத்தில் ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பாள்.
இதனாலேயே கல்யாண வீடுகளுக்கு செல்வதற்கு உம்மா தயாராகுவதை பார்க்கவே நல்லாயிருக்கும்.
பிளிட்ஸ் இல்லாமல் நேர்த்தியாக சேலை உடுத்தி, முகத்திற்கு பாண்ட்ஸ் அல்லது என்சாண்டியர் பவுடர் பூசி, இமைகளுக்கு சிறிதாக கண்மை பூசி பொண்ணுக்கு போட்டியாக தயாராகி விடுவாள்.. தலைமுடியை கொண்டை போட்டு, கொண்டை ஊசி வைத்து தலை நிறைய முக்காடு போட்டுக்கொண்டு முக மலர்ந்த புன்னகையோடு அம்மா போகும் பாங்கை பார்க்கவே அழகாகயிருக்கும்.
வெள்ளையில் லாவண்டர் மற்றும் மஞ்சள் நிற பூக்கள் போட்ட உம்மாவின் முக்காடு பார்க்கவே அழகாக இருக்கும். உம்மாவை போலவே !!! அதன் பார்டரில் பிறை போல சிகப்பு நிறத்தில் அடிக்கப்படிருக்கும் எம்ராய்டரி துப்பட்டாவின் அழகை தனியாக காட்டும். பெரும்பாலும் கல்யாணங்களுக்கு உம்மா அந்த துப்பட்டா தான் போடுவாள்…
இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்தது போன்றிருக்கும் கடா பேங்கில் ( பெரிய வளையல் ) ஒரு கைக்கு, இரண்டு தங்க வளையல்கள் மற்றும் சிறிய சிறிய காசு வைத்து செய்த பிரேஸ்லட் மற்றொரு கைக்கும் போட்டு விட்டு, அடர் ரோஸ் மற்றும் வெள்ளை கற்கள் பதித்த மாட்டி கம்மலை காதுகளுக்கு மாட்டியதும் இன்னும் அழகாக தெரிவாள்…
உம்மாவிற்கு ஒப்பனையே தேவையில்லை. முகத்தை கழுவி கூந்தலை சீவினாலே உம்மா அழகி தான்.
சீக்கிரம் கிளம்பும்மா… பொண்ணை கூட இப்படி ரெடி பண்ண மாட்டாங்கன்னு ஆமீனா சொல்ற வரைக்கும் உம்மா ரெடியாகிட்டு இருப்பாள்…
கல்யாண வீடுகளில் உம்மா நடுவீட்டில் பொண்ணுக்கு பக்கத்தில் அமர்த்திருப்பாள். மாப்பிள்ளை பெண்ணுக்கு பால் பழம், பாச்சோறு ஊட்டுவது முதல் அவர்களின் கைகளை சேர்த்து வைத்து கைக்குட்டை போடுவது வரை எல்லாமே உம்மா தான் செய்வாள்…
தாலிக் கட்டி முடித்து மாப்பிள்ளை வீட்டுக்கு செல்லும் பெண்ணோடு தானும் போயி, அங்கேயேயிருந்து மதியம் பெண்ணை அழைத்து வந்து விட்ட பிறகு தான் வீட்டுக்கே வருவாள்.
கல்யாண வீட்டில் நடந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாக வீட்டுக்கு வந்ததும் கதை போல உம்மா சொல்வதும் அழகு தான். அவ்வாறு சொல்லும் போது அடிக்கடி வாப்பாவை பார்த்துக் கொள்வாள். அந்த பார்வையில் ஆயிரம் அர்த்தம் இருக்கும்…
நேரில் நடந்ததை விட உம்மா சொல்லக் கேட்பது சுவாரசியமாக இருக்கும். நிகழ்வுகளை அழகாகவும் அடுக்காகவும் சொல்வதில் உம்மா கைதேர்ந்தவள்.. இல்லை வாய் தேர்ந்தவள் !!!!
இப்போதெல்லாம் உம்மா கல்யாண வீடுகளுக்கு போறதேயில்லை. கல்யாண வீட்டு கதைகளும் கேட்க முடியாமல் போனது. பெரிய வளையல், மாட்டி கம்மல் எல்லாம் போட்டு ஆறு மாதமாகி விட்டது. வெள்ளையில் பூப்போட்ட உம்மாவின் முக்காடு பீரோவில் மடித்து வைக்கப்பட்டு இருக்கிறது. கூடவே உம்மாவின் சிரிப்பும்…
கணவனை இழந்த பெண்களுக்கு சமூகத்தில் இதெல்லாம் சகஜமாக நடந்துக் கொண்டிருப்பது உம்மாவுக்கும் தெரியும். ஆனால் தனக்கு நடக்கையில் அந்த தவறை பொறுத்து போக அவளால் முடியவில்லை.
====================
அன்றைக்கு இரவு பைசல் போன் பேசுகையில் இதையெல்லாம் ஆமீனா சொன்னாள். எல்லா விஷயங்களும் காட்சியாக விரிந்து சமூகத்தில் நடக்கும் புறக்கணிப்புகளும் உம்மாவின் இந்த மாற்றத்திற்கும் கோபத்திற்கும் உண்மையான காரணம் என பைசலுக்கு விளங்கி விட்டது.
சரிக்கா!! கொஞ்ச நாள் போனா எல்லாம் சாரியாகியிடும்னு சொல்லிட்டு போனை வச்சிட்டான்.
இரண்டு மாதங்கள் உருண்டோடி விட்டது. பைசலும் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தான். உம்மாவின் நடவடிக்கையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. இந்நிலையில் ஆமீனாவின் பையனுக்கு பொண்ணு பார்த்து இரு குடும்பத்தாரும் இதுதான் பொண்ணு, இதுதான் மாப்பிள்ளைன்னு பேசி முடிவு செய்த பிறகு,
பெண் வீட்டிலிருந்து வந்த பெரியவர் வெற்றிலை பாக்கு தாம்பூலத்தை பைசல் கையில் கொடுக்க போகையில், ம்மா !! இந்த தாம்பூலத்தை வாங்குமான்னு சொல்ல, எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ஆமீனா உட்பட !!.
குடும்பத்துல உம்மா தான் பெரிய மனுஷி. அவங்க வாங்குறது தானே முறைன்னு சொல்லி அந்த இடத்தில் உம்மாவை முன்னிலைப்படுத்தி விட்டான்.
இரண்டு நாட்கள் கழிச்சி நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்வோம். அதற்கு அடுத்த நாள் பால் பழம் தரோம்னு அப்போவே பேசி முடிவும் பண்ணிட்டாங்க..
இறைவனின் கிருபையால் நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்து, அன்றைக்கு இரவு, நாளைக்கு யாரெல்லாம் பொண்ணு வீட்டுக்கு போகணும்னு பேசிட்டு இருக்கும் போது, பால் செம்பை உம்மா தான் கொண்டு போவாங்கன்னு பைசல் சொல்லி விட்டான்.
வேற யாரையாவது கொண்டு போக சொல்லலாம்ல அப்பான்னு உம்மா சொல்லவும், எங்களுக்கு உன்னை விட பெரிய ஆளு யாருமில்லமா!!. நீதான் கொண்டு போற.. அவ்ளோ தான் !!
ஆமாமா நீதான் கொண்டு போகணும். உன்ன விடவா வேற ஆள் வேணும்னு மாப்பிள்ளையும் சொல்ல, உம்மாவின் கண்களில் கண்ணீர் கட்டி விட்டது.
ஆமீனா, அந்த துப்பட்டாவை வெளியே எடுத்து போடுன்னு சொல்லிட்டு, அதை தன் கையாலயே துவைச்சு காய போட்டு விட்டாள். துப்பட்டாவை துவைக்கையில், திருவிழாவில் காணாமல் போன குழந்தை தாயிடம் சேர்ந்ததை போல உம்மாவின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி…
சுமார் எட்டு மாதங்களுக்கு பிறகு வெளிவுலகை பார்த்த துப்பட்டா கொடியில் காற்றோடு கதைப் பேசி ஆட, பைசலும் ஆமீனாவும் நாளைக்கு உம்மா தயாராகுவதை காணவும் கதை சொல்வதை கேட்கவும் ஆர்வமாக இருந்தார்கள்.


