ஓர் கூதிர் கால அந்தியில்
பருத்திச் சீலையின் கதகதப்பை
மடியில் முகர்ந்தபடி
மழலையாய் ஆயிடம் கேட்டேன்
நிலவு ஆணா பெண்ணா
அவள் புன்னகைத்துச் சொன்னாள்
திருநங்கை
—
முலைகளும் விதைப்பையும் தாங்கிய சரீரம்
கடல் குடித்து வீங்கிய ஆமையாய்க்
கங்குலில் மல்லாக்கக் கிடக்கிறது
குறிஞ்சி வேலன் சன்னதிக்கு அருகே
கருங்கொங்கணக் கிளையில் காய்த்த
நாடன் சுவடி
செய்தியிலில்லை
ஓலையிலிருந்த கற்பூர சுகந்தம்
சரத்காலமே
விதுவின் அந்திம காலம் எனும் ஆரூடம்
காவடி ஏந்திய திருநங்கைகள்
கிரிவலம் வந்தபோதிலும்
சுடர் தங்காது
என மலை அறியும்
நிசாகர சாபம்
தீர்ந்தபாடில்லை
காய்ச்சலில் உருகி வளர்கிறது விது
அம்புலியின் பஸ்மத் தூரலில்
காட்டை முகரும்
மட்குண்ணிகள்
மண்புழுக்கள்
மடந்தையாய் நாணி மிளிரும்
கரையான் புற்றுகள்
ஆத்திரக் குப்பிகள்
நிரம்பி வழிய
விதுக் குறியின் ஊற்றெனப் புரிந்ததும்
அலறி ஓட்டம்
விசித்திரமாய் பெருகிப் புடைக்கிறது
நிலவின் வயிறு
உள்ளில்
ஒரு மர்ம இரவாடியின் அசைவு
மேனி முழுக்க
அம்மைத் தழும்புகள்
அகாதத்தினுள்
கருத்துப் தேங்கிய ரகசியச் சுனைகள்
நிலவே
ஓர்மைகளின் வெளிச்சக் காடு
ஒளியைப் புதிரென உரித்து வீசும்
உருண்டு திரண்ட பன்னகம்
அதோ
என் இசக்கியின்
கொலுசணிந்த நிழல்
நிலவின் மண் பதியாத
அவள் பாத வளைவில்
என் சொப்பன முத்தங்கள்
அவள் புழையில்
என் உருகிய பாகின்
எண்ணெய் மணம்
அவள் குரல்வளையில்
இழைந்திருந்த கோகிலத்தின் மதுரம்
என்னவளின் மமதையில்
கிரகணத்தின் கவர்ச்சி
—
மூன்றாம் சாம அம்புலியில்
வெடிக்கும் குமிழிகளின் ஓலங்கள்
பேய்களாய் மேற்கு மலையில் இறங்குகிறது
மரணத்தின் துர்கந்தம்
சந்திரப் பெருமூச்சுகளை முகர்ந்த கூகைகள்
இழவுப் பாடல்களை இசைத்தபடி
வடக்கிருந்து மாய்கின்றன
பருதியும் அஞ்சிடும்
உக்கிரப் பிரகாச மலரைச் சூடி
நிற்கிறாள் இரவானவள்
நிலவின் பின் புறத்திலிருந்து
சிதறிப் பறக்கின்றன
ஆயிரம் கோடித் திருநங்கை மின்மினிகள்
பிலத்தின் கடைசிச் சுவர்களை
வெளிச்சம் வருடியதும்
கனவு கலைந்தெழுகிறான்
ஒரு யௌவன யோகி
கிரணங்கள்
குறியைத் தழுவ
முதிர்ந்த அம்புலி எழுப்பும்
அமானுஷ்ய முனகல்களால்
நடுங்குகிறது கம்பீர உழுவை
யாரும் எதிர்பாரா கணம்
விடியலில்
பௌர்ணமி வெடித்துச் சிதற
புறமுதுகைக் காட்டினான் மார்த்தாண்டன்
எங்கும் இசக்கியின் அல்குல் சுரந்த
அந்தகாரத்தை ஒத்த
காரிருள்
நான்காம் யாமம்
வேர்ப்பினில் நிலவை உமிழ்கிறது
கருஞ்சுனையருந்திய சயிந்தவம்
பழவத்தின் மையிருள் சுனையிலிருந்து
உதித்தது
திருநங்கை ஈன்றெடுத்த நிலவு
அதன் உள்ளங்கையில்
சரத்கால ரேகைகள்
முகத்தில் சுவடின்றி மறைந்து போன
ஒரு யௌவன யோகியின்
கள்ளச் சாயல்


