நூல்: விலங்குப்பண்ணை
ஆசிரியர்: ஜார்ஜ் ஆர் வெலின்,தமிழில் க.நா.சு.
பக்கம்:139
ஒரு சர்வாதிகாரம் எப்படி உருவாகிறது என்பதை மிக எளிமையான மொழியில் இந்நூல் விளக்குகிறது. அரசியல் விழிப்புணர்வு பெற விரும்புவோருக்கு இதைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.
போராடிப் பெற்ற உரிமைகள், எப்படித் தந்திரமாகப் பறிக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது.
ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘விலங்குப் பண்ணை‘ உலக இலக்கியத்தில் மிக முக்கியமான ஒரு நாவல். இது 1945-இல் வெளியிடப்பட்டது. மேலோட்டமாகப் பார்த்தால் இது விலங்குகளைப் பற்றிய ஒரு கதை போலத் தெரிந்தாலும், உண்மையில் இது ஒரு அரசியல் பகடி என்று கூறலாம்.
இப்போது நடக்கிற பல அரசியல் நிகழ்வுகளை இந்தக் கதையோடு தொடர்பு படுத்திக் கொள்ளலாம். எப்பவும் எல்லாம் அழகாக இருக்கிறது. நல்லதே நடக்கிறது என்றுதானே ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். அவர்களின் வாக்குறுதிகளில் நிறைய விஷயங்கள் நமக்கு மறந்து போகிறது. நமக்கு நல்லது தான் நடக்கிறது என்று நம்புகிறோம். நமக்கு பொது எதிரி ஒருத்தன் இருக்கிறான் அவன் வந்து விடக்கூடாது என்று சொல்லி நம்மை பழைய நிலைக்குத் தள்ளுகிறார்கள். 1940 இல் எழுதப்பட்ட நாவல் இது கிட்டத்தட்ட 86 வருடம் கழித்தும் எதுவும் மாறவில்லை.
ஜோன்ஸ் என்பவர் விலங்குப் பண்ணை வைத்திருக்கிறார். நிலங்களுடன் கூடிய பண்ணையாக அது இருக்கிறது. குதிரைகள், பன்றிகள், ஆடுகள், கோழிகள், புறாக்கள், பசு மாடுகள் என்று நிறைய விலங்குகள் அந்தப் பெரிய பண்ணையில் இருக்கின்றன. அவற்றுக்குச் சரியானபடி உணவு கொடுக்காமல் வேலை வாங்கப்படுகிறது என்றும், முட்டை, இறைச்சி, பால் என்று அவற்றை வைத்து வியாபாரம் செய்து ஜோன்ஸ் சம்பாதிக்கிறார் என்றும் ‘கிழட்டுத் தளபதி ‘ என்று பட்டம் பெற்ற வெள்ளைப் பன்றி கருதியது. எல்லா விலங்குகளையும் அழைத்துப் புரட்சிப் பற்றிப் பேசுகிறது. மனிதர்களை நம்ப கூடாது நாமே பண்ணையை நிர்வகிக்க வேண்டும் என்று கூறுகிறது.
“இங்கிலாந்தின் மிருகங்களே” என்று தொடங்கும் புரட்சிப் பாடலைப் பாடுகிறது. அந்தப் பன்றி இறந்தாலும் ஸ்னோபால், நெப்போலியன் என்ற இரு பன்றிகளும் தொடர்ந்து புரட்சியை வலியுறுத்துகிறது. கிழட்டுப் பன்றியின் உபதேசங்களை ஒரு வாழ்க்கை தத்துவமாகவும், ஒரு வாழ்க்கை வழிகாட்டியாகவும் எண்ணி இவையே விலங்குகள் தத்துவம் என்று வைத்துக் கொண்டன.
மாலி என்கிற வெள்ளைக் குதிரை மட்டும் புரட்சிக்குப் பிறகும் சர்க்கரை கட்டி கிடைக்குமா? என் பிடரியில் ரிப்பன்களை அணிந்து கொள்ள அனுமதி கிடைக்குமா? என்று கேட்கிறது. உன் மனதைக் கவர்கிற அந்த ரிபன்கள் உன் அடிமைத்தனத்தின் சின்னங்கள் என்று கூறியதைக் கேட்டதும், இதைத்தானே பெரியாரும் பெண்களுக்குக் கூறினார் என்று தோன்றியது. அதிகார வர்க்கம் ஏழை மக்களை எப்படி அடக்கி ஒடுக்கி தன் தேவைகளை நிறைவு செய்து கொள்கிறதோ அதேபோல் மனிதன் விலங்குகளைத் தன் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறான். மனிதன் மட்டும் இந்த உலகத்தில் இல்லை என்றால் என்னவாகும் என்று நினைத்துப் பண்ணையிலிருந்து ஜோன்சை விரட்டிச சாதித்துக் காட்டுகின்றன. ஆனால் அவைகளுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாமல் ஸ்னோபாலை விரட்டி விட்டு, நெப்போலியன் ஆட்சி செய்கிறது. அது ஒரு சர்வாதிகாரியைப் போல நடந்து கொள்கிறது கடைசியில் மனிதனைப் போலவே மாறிவிட்டது பன்றி. கடைசி வரை மற்ற விலங்குகள் கஷ்டம் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் தனக்கு ஏற்றவாறு சட்டங்களை மாற்றிக் கொள்ளும் போது அதிகார வர்க்கம் என்னவெல்லாம் செய்கிறது என்று நினைக்க வைத்தது!
இது சோவியத் யூனியனை மையப்படுத்தி எழுதிய நாவல். ரஷ்யப் புரட்சி அதன் பிறகு நடந்த ஸ்டாலின் சர்வாதிகார ஆட்சி இவற்றை உருவகப்படுத்தி எழுதியிருக்கிறார் ஆசிரியர்.
– ஜெயா சிங்காரவேலு.


